2008 வெளி வந்த குங்பு பண்டா திரைப்படத்தை வெறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் அது. எந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் அதைத் தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் எடுப்பது ஹாலிவூட் வழமை. அவ்வகையில் இந்த குங்பு பண்டா 2 வெளிவந்திருக்கின்றது. குங்கு பண்டா கதை என்னவெனில் ஒரு நூடில் கடையில் பிறந்து (அப்படித்தான் முதல் நினைத்தோம் ஆனால் தத்தெடுக்கப்பட்டது) வளர்ந்த ஒரு பண்டா பெரிய குங்பு சண்டைக்காரனாக வர விரும்புகின்றது. அதன் ஆசையும் முதலாம் பாகம் நிறைவில் முற்றும் பெறுகின்றது. அதாவது சீரோ டு ஹூரோ கதை
இரண்டாம் பாகத்தில் புதியதாக ஒரு கதை முளைத்து விடுகின்றது. பண்டாவின் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு ஏதோ நடந்ததாகவும் அதற்கு ஒரு வெள்ளை மயிலே காரணம் என்றும் மெல்ல மெல்ல தெரியவருகின்றது. பண்டா தன் பூர்வீகத்தை அறிந்து கொண்டதா மயிலிற்கு என்ன ஆனது போன்ற விடையங்களுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.
எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அனிமேசன் திரைப்படங்களின் கதையமைப்பும் காட்சியமைப்புகளும் நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகின்றது. நிறம் மொழி மதம் அவை எல்லாவற்றையும் விட வயது போன்றவற்றைக் கடந்து எங்களை இரசிக்க வைக்கின்றது.
Jennifer Yuh நிச்சயமாக கடும் முயற்சியையும் உழைப்பையும் இந்த திரைப்படத்தில் சிந்தி இருக்கின்றார். காட்சிக்கு காட்சி வரும் பண்டாவின் சேஷ்டைகளும், வார்த்தைக்கு வார்த்தை வரும் பகிடிகளும் படத்தை தூக்கி நிறுத்துகின்றது.
திரைப்படத்தின் முடிவு ஒரே கூத்தாக இருக்கும். பூவின் (அதான் பண்டாவின் பெயர் பூ) உள்மன அமைதியும் அதைத்தொடர்ந்த விளைவுகளும் துறைமுகத்தில் எதிரி யுத்தக்கப்பல்கள் முன்னாடி.. அட்ரா சக்கை அட்ரா சக்கை.. அதை நீங்களே பார்த்துக் கொள்ளவும்.
குடும்பத்துடன் சென்று இரசிக்க நிச்சயமாகத் தரமான ஒரு திரைப்படம். கட்டாயமாகத் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மூன்றாம் பாகத்தின் தொடக்கப் புள்ளியை இரண்டாம் பாகத்தின் முடிவில் காட்டிவிட்டார்கள்.