ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். ;)


நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்

இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. :) ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். :)

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (11)

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் ;)

My Rating: 65/100

IMDB Rating: 67/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (7)

மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி

புத்தக அட்டை

அண்மையில் சில காமிக்ஸ் புத்தகங்களை கையகப்படுத்தியிருந்தேன். அவற்றை ஒன்று ஒன்றாக வாசித்து இங்கே குறும் பதிவுகளாக இடும் உத்தேசம். அவ்வகையில் இன்று வாசித்துப் பதிவு இடப் போகும் புத்தகம் ரிப்போட்டர் ஜானி தோன்றும் மரண மாளிகை.

நாம் பல ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் ஜோடி நம்பர் வன், சுப்பர் சிங்கர் என்று பல. அதே போல வெளி நாடுகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம். அண்மையில் நம் ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் ஞாபகமா?? அது கூட ஒரு ரியாலிட்டி ஷோவேதான். எங்கள் கதையும் இப்படியான ஒரு ரியாலிட்டி ஷோவை சுற்றியே நடக்கின்றது.

பெந்தோசு மாளிகையில் ஒரு ரியாலிட்டி ஷோ அங்கே அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள். இதைத் துப்பறிய எங்கள் ரிப்போட்டர் ஜானி களம் இறங்குகின்றார். மெல்ல மெல்லமாக முடிச்சுகளை அவிழ்கின்றார். இறுதியில் எதிர் பாரா ஒரு வில்லன் வந்து அமைந்து விடுகின்றான்.

கதை வேகம் என்னவோ மிகவும் மந்தம்தான்.  நான் ரிப்போட்டர் ஜானியின் கதைகளுக்கு பெரிய விசிரியாக இருந்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன். ரிப்போட்டர் ஜானி மார்ச் 3, 1955 இல் பிறப்பெடுத்திருகின்றார். ரின் ரின் எனும் காமிக்ஸ் புத்தகத்தில் இவர் வந்திருகின்றார் முதன் முதலாக. தமிழில் ரிப்போட்டர் ஜானி என்று அறியப்பட்டாலும் தலை ஆங்கிலத்தில் Ric Hochet என்றே அறியப்படுகின்றது.

இப்படியான காமிக்ஸூகளை ஆங்கிலத்தில் கூடத் தேடிப் பிடிப்பது கடினம். எங்கள் பாக்கியம் லயன் முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் தமிழில் வெளியிடுகின்றமை.

posted by ஹாலிவூட் மயூ in காமிக்ஸ் and have Comments (5)

டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்

டெக்ஸ் வில்லரின் சாகசங்களை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனிதான். அவ்வகையின் அண்மையில் டெக்சின் ஒரு சாகசத்தை வாசிக்க கிடைத்தது. வருந்தத்தக்க விடையம் என்னவெனில் இந்தப் புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. அடியேன் கையின் சிக்கியதோ இந்த முதற் பாகம் மட்டுமே.

இந்தக் கதையின் சிறப்பு என்னவெனில் டெக்சின் வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதே. டெக்சின் செவ்விந்திய மனைவி, மகன் என்று கதை நீள்கின்றது.

இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு என்று தொடர்ந்திருக்கின்றன. கடைகளில் தேடியும் இன்னமும் இந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை.

நீண்ட நாளாக காமிக்ஸ் பதிவு இடாத காரணத்தால் இந்த சிறிய காமிக்ஸ் பதிவு ;)

கொசுறுத் தகவல்: நம் பலரும் விரும்பி வாசிக்கும் லயன் ஆசிரியர் திரு. விஜயனின் “சிங்கத்தின் சிறுவயதில்” தொடரும் இந்த இதழில்தான் ஆரம்பமாகின்றது.

posted by ஹாலிவூட் மயூ in காமிக்ஸ் and have Comments (3)

The Twilight Saga: Eclipse விமர்சனம்

ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று ஒரே வியப்பாக இருக்கலாம்.

கதைச் சுருக்கம் என்னவென்றால் பல ஹொலிவூட் திரைப்படங்களிலும் வந்து பயமுறுத்தும் ட்ரகுலா (இரத்தக் காட்டேரி) பற்றிய கதையே இது.  இரத்தக் காட்டேரி வந்தால் அவர்களை எதிர்க்க வெயாவூல்ப் எனும் ஒநாய்களும் இருந்தேயாகும்.  இக்கதையிலும் அதற்கு குறைவில்லை. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மனிதப் பெண்ணுடன் ஒரு வம்பயர் காதலில் வீழ்கின்றது. அந்தப் பெண்ணும் காதலில் வீழ்கின்றாள். இதற்கிடையில் சாதாரணக் காதல் முக்கோணக் காதலாகின்றது ஒரு வெயாவூல்பின் அறிமுகத்தால்.  வம்பயர் காதலிக்கும் பெண்ணை இந்த வம்பயர்களை காலம் காலமாக வெறுக்கும் வெயார்வூல்பும் காதலிக்கின்றது. இவர்கள் மூன்றுபேரையும் சுற்றியே 4 புத்தகங்களும் 3 திரைப்படங்களும் (கடைசி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை) நகர்கின்றது.


Vampires இருந்தால் திரைப்படத்தில் காதலிற்கு குறைவேயிருக்காது. வம்பயர்கள் கடும் காதல் மன்னர்கள். இந்த திரைப்படத்தில் வரும் Edward அமைதியான வம்பயர். அதாவது மனிதர்களைக் கொலை செய்யாமல் மிருகங்களைக் கொண்டு இரத்தம் அருந்தி பிழைக்கும் ஒருவர். அவருடன் அவரைப்போலவே பழக்கமுடைய ஒரு குடும்பத்தார்.

மறு பக்கத்தில் காலம் காலமாக Fork நகரில் வாழ்ந்து வரும் செவ்விந்திய வழித்தோன்றல்கள். இவர்கள் குடும்பத்தில்தான் அடுத்த நாயகன் Jacop Black பிறக்கின்றார். இவர்தான் அந்த Werewolf குடும்பத்தில் பிறந்த ஒரு பையன்.

Bella மற்றும் Edward

அப்புறம் பெல்லா எனும் பெண் இந்த போர்க் நகருக்கு வருகின்றாள்.  ஒரே நகரில் வசிக்கும் Vampire, Werewolf இந்தப் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்.

இதேவேளையில் Bella வைக் கொலை செய்ய முயலும் ஒரு கெட்ட வம்பயரைக் கொலை செய்துவிட அதனால் கோவப்படும் விக்டோரியா எனும் காதலி வம்பயர் பெல்லாவைக் கொல்ல அலைகின்றது. பாகம் இரண்டிலிருந்து விக்டோரியாவிடம் இருந்து பெல்லாவைக் காப்பாற்றும் பொறுப்பு எட்வார்ட் மற்றும் யேகோப்பிடம்.

இந்த மூன்றாம் பாகத்தில் இந்த விக்டோரியா பிரைச்சனை என்ன ஆனது. இவர்களைப் பழிவாங்க விக்டோரியா என்ன செய்தார் என்பதே கதை. இதற்கு மேலும் கதையைச் சொல்ல விருப்பமில்லை.

முதலம் பாகத்தை பலரும் விரும்பிய போதும் இரண்டாம் பாகத்தை பலரும் பெரிதாகப் போற்றிப் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் முதலாம் பாகமே சிறப்பாக எடுத்திருக்கின்றனர் அதற்கு அடுத்ததாக மூன்றாம் பாகமான எக்கிளிப்ஸ் சிறப்பாக உள்ளது.

திரைக் காட்சியமைப்புகள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக வம்பயர், வேர்வூல்ப் சண்டைக் காட்சிகள் அபாரம். இயல்பாகவே பன்டசி கதைகளில் நாட்டம் உள்ளோர் கட்டாயம் இந்த திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பர்.

MY RATING: 75/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (5)

Clash of the Titans (2010) – விமர்சனம்

கடந்த மாதம் லைட்டனிங் தீஃப் என்ற திரைப்படம் பற்றி ஒரு குட்டி விமர்சனம் போட்டிருந்தேன். அந்தக் கதை கிரேக்க கடவுகள் பற்றியது. இன்று Clash of the Titans பார்ப்போம் என்று போய் உட்கார்ந்தால் ஒரே அதிசயம். முன்பு கூறிய திரைப்படத்தில் வந்த பல கிரேக்க கடவுகளும் ஜந்துகளும் இங்கேயும். நாயகனின் பெயர் கூட பேர்சியஸ் என்று இருக்கின்றது. முந்திய படத்தில் பேர்சி ஜக்சன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏற்கனவே கிரேக்க வரலாறு கடவுகள் பற்றி எதுவும் தெரியாது அப்புறம் இந்தப் படத்தில் போய் இருந்தால் ஏதோ ஏதோ எல்லாம் காட்டி வெறுப்பேத்தினார்கள். சாம் வேர்திங்கடன் இந்த படத்தில் ஒரு வேர்த்தும் இல்லாமல் மொக்கையாக நடித்திருக்கின்றார். அவதாரிலும் டேர்மினேட்டரிலும் பார்த்த வேர்த்திங்கடன் மிஸ்ஸிங். அது போதாதென்று இடைவேளை நெருங்கும் போதே சாதுவாக கொட்டாவியும் விடத் தொடங்கிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.

பின்னர் ஒரு நாள் ஒரு மீனவன் மிதந்து வரும் ஒரு பேளையை காண்கின்றான். அதை திறக்கும் போது அங்கே நம் நாயகன் பேர்சியஸ் இருக்கின்றார். தனது இறந்த தாயின் மேல் இருக்கும் பெர்சியசை அந்த மீனவன் காப்பாற்றி தன் மகன் போல பேணிப் பாதுகாக்கின்றான்.

இதே வேளை மனிதர்கள் கடவுள் மேல் கோவம் கொண்டு கடவுளுடன் யுத்தப் பிரகடனம் செய்கின்றனர்.

நரகத்தை ஆண்டுவரும் ஹைடஸ் சியசின் அனுமதி பெற்று மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றார். இதில் உச்ச கட்டமாக கிரக்கன் எனும் விலங்கையும் பாவிக்கின்றான். கிரக்கன் எனும் இந்த விலங்கை வைத்தே டைட்டன்களுடனான யுத்தமும் வெல்லப் பட்டது என்பதும் குறிப்பிட்டாக வேண்டும். அது சரி இந்த கிரக்கனை பைரேட்ஸ் ஒப் த கரிபியனிலும் பார்த்தோம் தானே :)

அப்புறம் விதியின் வசத்தான் மனிதர்களால் நம் நாயகன் தேர்ந்தெடுக்கப் பட்டு ஹடைசை அழிக்கப் புறப்படுகின்றார். முக்கியமான பல தகவல்களை இங்கே நான் சொல்லவில்லை. அனைத்தையும் திரையில் காணுங்கள் அல்லது டிவிடியில் காணுங்கள்.

ஏற்கனவே திரைப்படத்தில் சரக்கு கம்மி இதில் நானும் உளறிவிட்டால் :)

நிச்சயமாக அதி மொக்கைப் படம் இல்லை. ஆனால் எதிர்பார்ரதளவிற்கு இல்லை. இதைவிட 1981ல் வெளியான திரைப்படம் சிறப்பாக இருக்கின்றது என்று பழைய சினிமா இரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

காட்சியமைப்புகள், சத்தவமைப்புகள் சிறப்பாக உள்ளன. அவையே திரைப்படத்தின் நம்பிக்கைக் தூண்களாக இருக்கின்றன. இந்த விடுமுறை காலத்தில் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெரிய மெகா ஹிட் திரைப்படம் ஆகப் போவதில்லை.

My Rating: 50/100

IMDB Rating: 61/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (5)

The Road (2009) விமர்சனம்

உலகம் அழிவில் வீழ்வதாகவும், அதில் மானிட இனமே அழிந்துபோவதாகவும் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அழிவிற்கு இயற்கையின் சீற்றமோ அல்லது சொம்பி போன்ற காரணங்களோ அல்லது நோய் நொடிகளோ அல்லது அணுவாயுத யுத்தமோ அல்லது வேறு ஏதாவது காரணங்களோ இதுவரை ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டியிருக்கின்றார்கள்.

ஆனால் மிக குறைவான திரைப்படங்களிலேயே உலகின் நாகரீகங்கள் அழிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவ்வகையில் இந்த த றோட் எனும் திரைப்படமும் உலகின் நாகரீக அழிவின் பின்னர், நாகரீகம் அற்ற ஒரு சமூதாயத்தின் கோரப் பிடியில் இருந்து தப்ப விழையும் ஒரு தந்தை, தனயனின் கதையே ஆகும்.

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நாவலிற்கு புலிட்சர் விருது கூடக் கிடைத்துள்ளது.


கதையின் ஆரம்பத்தில் இருந்து ஒரு தந்தையும் மகனும் ஒருமித்துப் பயனிக்கின்றார்கள். மிகவும் அழுக்கான உடைகளை அணிந்திருப்பதுடன் மிகவும் நலிவடைந்தும் இருக்கின்றார்கள். இவர்கள் யார் இவர்கள் பிரைச்சனை என்ன வென்று நாங்கள் நினைக்கும் போதே அவர்களின் பிந்தைய காலத்தையும் காட்டிவிடுகின்றார்கள்.

உலகின் நாகரீகம் அழியும் தறுவாயில் ஒரு குடும்பத்தினுள் ஒரு புதிய நபர் பிரவேசிக்கின்றார். ஒரு குழந்தை பிறக்கின்றது இந்த தம்பதியினருக்கு. சந்தோஷமாக இருக்கவேண்டிய இந்த நிகழ்வு இவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றது. தாமே இந்த நிலையில் எவ்வாறு வாழ்க்கையை நடத்தப் போகின்றோம் என்று நினைக்கும் வேளையில் எவ்வாறு இந்த மகனை பொறுப்பாக வளர்த்தெடுப்பது என பெற்றோர் கலங்குகின்றனர்.

நிலமை மோசமடையத் தொடங்கவே, நம்பிக்கை இழக்கும் தாயார் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றார். சற்றும் மனம் தளராத தந்தையோ இறுதிவரை போராடப்போவதாக் கூறுகின்றார். பின்பு இனிமேலும் தன்னால் இப்படியான வாழ்க்கையை வாழ முடியாது என்று எண்ணி தாயார் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றார். இப்போது தந்தையும் மகனும் மட்டுமே குடும்பத்தில் மிச்சம்.

தனயனும் தந்தையும் பயனத்தின் போது

அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் இன்னமும் நாகரீகம் அழிந்துவிடாமல் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் தந்தையும் தனயனும் தமது பயனத்தை ஆரம்பிக்கின்றனர்.

இவர்களின் பயனத்தில் சந்திக்கும் இடையூறுகள பற்றியதே மீதிக் கதை. இதில் திகிலூட்டும் விடயம் என்னவெனில் மனிதர்களை உண்ணும் மனிதர்கள்.

நாகரீகம் அழிந்து அதனுடன் உணவு உறைவிடம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படுவதனால் ஒரு கூட்டம் மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாட புசித்து வருகின்றது. விடியலைத் தேடும் தந்தையும் தனயனும் இவர்களிடம் மாட்டுப்பட்டார்களா இல்லையா என்று பார்க்கும் நேரங்களில் நெஞ்சம் திக் திக் என்கின்றது.

தந்தை மகன் பாசப்பிணைப்பையும் உலகம் மாறினால் என்ன ஆகும் என்பதையும் அழகாகப் படம் ஆக்கியுள்ளார்கள். நேரம் கிடைத்தால் கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

My Rating: 80/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (5)

Awake (2007) விமர்சனம்

ஒவ்வொருநாளும் கோடிக் கணக்கானோருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் சுமார் சில ஆயிரக் கணக்கானோருக்கு இந்த மக்க ஊசிகள் சரியாக வேலைசெய்வதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா??

இதில் சிக்கல் என்னவென்றால், இவர்களால் சத்தம் போட்டு பேசக்கூடியதாகவோ அல்லது சைகைகள் காட்டக் கூடியதாகவோ இருக்காவிட்டாலும், இவர்களால் தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணமுடியும் அத்துடன் சிகிச்சை வலியையும் உணரமுடியும். உங்கள் நெஞ்சில் அறுவைச் சிகிச்சை பிளேடை வைத்து நெஞ்சைப் பிளந்து இதயம் வரை பார்க்கும் வலியை உணர்ந்து அதை வாயால் கத்த முடியாத நிலைக்கு போனால் என்னாகும்?? அந்த நிலையில் உள்ள ஒருவரது கதையே இந்த திரைப்படம்.


பணம், அழகான காதலி, அன்பான அன்னையார் அனைத்தும் இருந்தும் நாயகன் கிளைட்டனுக்கு விதி சரியில்லை. இதயத்தில் கோளாறு உடைய இந்தச் செல்வந்தன் ஒரு இதய மாற்று சிகிச்சைக்கு கட்டாயம் உள்ளாக வேண்டிய நிலமை. நல்ல வேளையாக இவரின் தோழனாக ஒரு இதய மாற்று சிகிச்சை நிபுணர் அறிமுகம் ஆகின்றார்.

நட்பின் அடையாளமாக நண்பன் மேல் கடும் நம்பிக்கை வைக்கும் கிளைட்டன், நண்பரின் தயவிலேயே தனது இதய மாற்று சிகிச்சையை நடத்த முடிவெடுக்கின்றார்.

க்ளைட்டனின் தாயார் அமெரிக்காவின் சிறந்த ஒரு வைத்திய நிபுனர் மூலமே இந்த இதய அறுவை சிகிச்சையை நடத்த விளைகின்றார். ஆனாலும் நண்பன் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையால் வைத்தியர் ஜாக்கிடமே தான் இதய மாற்று சிகிச்சை செய்ய விரும்புவதாக தனது கோடீஸ்வர தாயாரிடம் அறுதியாகக் கூறிவிடுகின்றான் இந்தத் தனயன்.

ஒரு நாள் மாற்று இதயச் சிகிச்சைக்கு ஏற்ற ஒரு இதயம் கிடைக்கின்றது. சந்தோஷமாக நண்பன் ஜாக்கின் உதவியுடன் அன்னையாரின் எதிர்ப்பையும் புறக்கணித்து சத்திர சிகிச்சை நடக்கின்றது.

இங்கே தான் கிளைட்டனுக்கு Anesthesia awareness, ஏற்படுகின்றது. இதன் பின்னரே கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. இதய மாற்று சிகிச்சை நடைபெறும் போது நடக்கும் சம்பாஷணை அனைத்தையும் கேட்கும் நிலமைக்கு கிளைட்டன் தள்ளப்படுகின்றான்.

இவ்வடமே கதையின் திருப்பு முனை. இதன் பிறகு கதையில் என்ன நடக்கின்றது என்பதைச் சொல்வதும் அழகல்ல.

திரைப்படம் பார்த்து முடித்த பின்னர் அருமையான ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி மனதில் கிடைத்தது. டாக்டரைக் காட்டி ஆரம்பிக்கும் திரைப்படம் டாக்டரை காட்டியே முடிகின்றது. வைத்திய முறைகளை தப்பாக இந்த திரைப்படத்தில் காட்டினார்கள் என்று குறைகள் முன்வைக்கப் பட்டாலும் அமெரிக்காவில் திரைப்படம் சூப்பர் ஹிட்டாம்.

அழகான காதல் கதை யூ டேர்ண் போட்டு அதகளப் படும் இடைவேளையின் பிறகு. பார்த்து இரசிக்கக்கூடிய திரைப்படம் ஒன்று.

My Rating: 75/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (2)

டெக்ஸ் வில்லர் தோண்றும் The Lonesome Rider

புத்தக அட்டை

காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள் என்றால் நிச்சயமாக டெக்ஸ் வில்லரைத் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. டெக்ஸ் குதிரையேறி வேட்டையாடும் காட்சியை லயன், முத்து காமிக்ஸில் படித்து திளைத்த காலம் ஒரு பொற்காலம்.

டெக்சின் கதைகள் 1948ல் முதன் முதலாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. இதே ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. அதைவிட எனது தாயாரும் தந்தையாரும் பிறந்ததும் இதே ஆண்டுதான். என் வாழ்வில் முக்கியமான ஆண்டாக இருக்கும் 1948ல் டெக்ஸ் பிறந்தமை மேலும் பெருமையே எனக்கு. ;)

காலம் பல கடந்தாலும் டெக்ஸ்சின் காமிக்சுகள் என்றும் இளமையானவையே. இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கௌபாய் நாயகனின் கதையொன்றை லக்கி லிமட் ஆதரவில் இணையத்தின் வழி படிக்க முடிந்தமை பெரும் மகிழ்ச்சியான விடையம். Tex – The Lonesome Rider என்கிற இந்தக் கதை நான் கடைசியாகப் படிந்த டெக்சின் கதையாகும்.

வழமையான டெக்சின் சித்திரங்களில் இருந்து மாறி வித்தியாசமான சித்திரப் பாணியில் இந்தக் கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முக்கியமான காரணம் இந்த காமிக்சின் ஓவியர் ஜோ குபேர்ட். காலப் பகுதியில் எழுதப்பட்ட & வரையப்பட்ட இந்தக் கதை முந்தய டெக்ஸ்வில்லர் ஓவியங்களில் இருந்து வேறுபட்டிருக்கின்றமை வெள்ளிடைமலை. அதைவிட இந்த லோன்சம் ரைடர் கதையில் டெக்சின் வழமையான தோழனான கிட் கார்சன் மற்றும் டைகர் ஜக் போன்றவர்களைக் காண முடியாது. இதனால் இந்தக் கதையில் டெக்ஸ் தனியாளாக சுப்பர் ஸ்டார் போல சண்டை போடுகின்றார்.

எனக்கென்ன்னவோ கதையை வாசிக்கும் போது டெக்சின் ஓவியங்களில் டிசி காமிக்சின் பனிஷர் ஓவியப் பாணியின் தாக்கத்தைப் பார்க்க கூடியதாகவிருந்தது. சில வேளை ஓவியர் தன் பாணியில் வரைய அப்படிச் செய்திருக்கலாம்.

யோ குபேர்ட் - ஓவியர்

சரி கதையில் என்ன நடக்கிறது என்று மேலோட்டமாக சொல்கின்றேன். தனது நண்பர் குடும்பத்தைப் பார்க்க நீண்ட காலத்தின் பின்னர் செல்லும் டெக்சிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது.

ஊர் மேய்ந்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் டெக்சின் குடும்ப நண்பர்களின் குடும்பத்தை வேட்டையாடிவிடுகின்றது.

இந்த படுகொலைகளுக்குப் பழி வாங்குவதாக இவர்களின் கல்லறையில் சத்தியம் புரிந்து புறப்படுகின்றார் அகில உலக காமிக்ஸ் சுப்பர் ஸ்டார் டெக்ஸ்.

அப்புறம் என்ன மீதிக் கதையைச் சொல்வது அழகல்லவே. டெக்ஸ் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து நரிகளை வேட்டையாடுவதுதான் கதை.

இவ்வளவு சிறப்பான இந்த டெக்ஸ் கூட அமெரிக்காவில் பிரபலமாகாமை ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சில வேளை சூப்பர் மேனும், பட் மேனும்தான் அவர்கள் உலகம் போல.

நீங்கள் டெக்ஸ் இரசிகரா?? அப்படியானால் கட்டாயம் இந்தக் கதையைப் படித்துவிடுங்கள்.

அமேசனில் வாங்க


New
தமிழில் இந்தக் கதையை லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் “சாத்தான் வேட்டை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

தகவல் உதவி: Siv, King Viswa, Mathu

பட உதவி: கிங் விஷ்வா

முன் அட்டை

பின் அட்டை


காமிக்ஸ் பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் அதற்கு ஒரு தனி வலைப்பதிவு திறக்க நினைத்தாலும் அளவிற்கு மிஞ்சி எதற்கு ஆயிரம் வலைப்பதிவு திறக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த ஹொலிவூட் பார்வை வலைத்தளத்திலேயே காமிக்ஸ் பதிவுகளையும் இடுவதாக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு செய்வது பிடிக்காதுவிட்டார் அறியத் தாருங்கள் நிச்சயமாக புது வலைப்பதிவு ஆரம்பித்துவிடலாம்.

posted by ஹாலிவூட் மயூ in காமிக்ஸ் and have Comments (17)

Drag Me to Hell (2009) விமர்சனம்

பேய்ப் படம் பார்த்து நிறைய நாள் ஆகிவிட்டது என்ற காரணத்தால் ஒரு திரைப்படத்தைப் பார்ப்போம் என்று நினைத்து கடையில் வாங்கியதே இந்த Drag me to Hell எனும் திரைப்படம். சும்மா காமடிக்காகப் பேய்ப் படம் பார்க்கப்போயி தலைவிறைத்த கதையாகிவிட்டது. பெயரைப் பார்த்தவுடனேயை கதை என்னமாதிரி என்று ஓரளவிற்கு ஊகித்துவிடலாம் தானே?? அதாவது கெட்ட சக்தி உயிர்களை உடலோடு நரகத்திற்கு இழுத்து செல்வதே கதையில் அடிப்படை.


கதை சில ஆண்டுகளுக்கு (1969) முன்னர் நடக்கும் ஒரு நிகழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. அதாவது நாடோடிகள் இனத்தின் மாலை ஒன்றை ஒரு சிறுவன் திருடிவிடுகின்றான். அதை மீள நாடோடிகள் அவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுக்கின்றனராம். 3 நாட்களாக கடும் தொல்லைகளுக்கு ஆளாகின்றான் அந்தச் சிறுவன். கடைசியாக ஒரு பேய் ஓட்டும் பெண்ணிடம் அவனை அழைத்து வருகின்றார்கள் அவனுடைய பெற்றோர்.

பேயோட்டும் பெண்மணி எவ்வளவு முயன்றும் முடியாமல் அந்தச் சிறுவனை ஏதோ ஒரு ஜந்து பூமியைப் பிளந்து உள்ளே இழுத்துச் சென்றுவிடுகின்றது.

அப்படியே கதை திரும்பி சில ஆண்டுகளுக்குப் பின்னர் (2009) நடக்கின்றது. இப்போது கதை ஒரு வங்கியில் பணிபுரியும் பெண்ணைச் சுற்றி நடக்கின்றது. ஒரு கடன் விடயமாக உதவி கோரும் ஒரு நாடோடி இன வயோதிப பெண்மணிக்கு உதவி செய்ய மறுக்கும் இந்த வங்கியின் பணி புரியும் நாயகியை விதி விளையாடத் தொடங்குகின்றது.

வழமையாகப் பலதடவை பார்த்த திரைப்படக் கதை என்றாலும் திரையிசையாலும் காட்சியமைப்புகளாலும் திகிலூட்டுகின்றார்கள். இரவு நேரத்தில் கிடக்கப்படாமல் இந்த திரைப்படத்தைப் பார்த்து ரொம்பவுமே நொந்து போய்விட்டேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து நித்திரை கொள்ள முயற்சி பண்ணியது வேற விடையம்.

இந்த திரைப்படத்திற்கான கதையை சுமார் பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எழுதி முடித்துள்ளனர். த கேர்ஸ் எனும் பெயருடன் தயார்ப்பிற்குச சென்ற இந்த திரைப்படம் பல ஆண்டுகள் கழிந்து 2009ல் உலகத் திரையரங்குகளில் வெளியானது.
காலம் தாழ்த்தி வெளிவந்தாலும் உலகம் முழுவதும் திரைப்படம் சுமார் $86,498,545வசூலை அள்ளியுள்ளது

ரொம்பவுமே ஜாலியாக இருந்து பயங்கரமான நிலைக்கு மாறவேண்டுமென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.

My Rating 60/100

IMDB RAting 72/100

posted by ஹாலிவூட் மயூ in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (2)
Tags: ,